4. திருப்பூவனம்

தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 255 வது ஸ்தலம். பாண்டிய நாட்டில் உள்ள ஸ்தலங்களில் 11  வது ஸ்தலம்.

இறைவன்: ஸ்ரீ  புஷ்பவனீஸ்வரர், ஸ்ரீ பூவனநாதர் .

இறைவி: ஸ்ரீ  சௌந்தர்யநாயகி, ஸ்ரீ மின்னனையாள்.



பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து இரசவாதம் செய்து பொன் கொடுக்க, அவள் இதனால் சிவலிங்கம் அமைத்து வழிபட, அது மிகவும் அழகாயிருப்பதைக் கண்டு ஆசையுடன் அச்சிவலிங்கத் திருமேனியை கிள்ளி முத்தமிட்டாளாம். கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் இன்றும் காணலாம்.


திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது.  

இத்தலம் புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.


 அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்
 குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம்
 முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந்
 திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே.
- திருஞானசம்பந்தர்

 வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
 வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்
 கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
 காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
 இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
 எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
 பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
 பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
- திருநாவுக்கரசர்

 திருவுடை யார்திரு மால்அய னாலும் 
 உருவுடை யார்உமை யாளைஓர் பாகம் 
 பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் 
 புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.
- சுந்தரர்

கருத்துகள்