18. திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)

இறைவன் : பாதாள வரதர், பாதாளேஸ்வரர்
இறைவி: அலங்காரவல்லி

இது சோழ நாட்டில் காவிரி நதிக்கு தெற்கே உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 99வது தலம் மற்றும் 216வது தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.



இத்தல இறைவன் முன்பு, திருமால் பன்றி வடிவம்கொண்டு பூமியைத் தோண்டி துவாரம் செய்தத் தலமாதலால், இப்பெயர் பெற்றது. வராக அவதாரமெத்த திருமாலின் கொம்பைப் பறித்து இறைவன் அணிந்து கொண்டத் திருத்தலமாகும். இன்றளவும் மூலஸ்தானத்தில் சிவபெருமானின் அருகில் இந்தத் துவாரம் உள்ளது. ஹரியாகிய நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துவாரம் போட்டதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது. மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று பெயர் வந்தது.

இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று.

பஞ்சாரண்ய ஷேத்திரங்கள்

முல்லை வனம் (திருக்கருகாவூர்), பாதரிவனம் (அவளிவநல்லூர்), வன்னிவனம் (அரித்துவாரமங்கலம்), பூளைவனம் (ஆலங்குடி), வில்வவனம் (திருக்கொள்ளம்புதூர்) ஆகிய ஐந்தும் பஞ்சாரண்ய ஷேத்திரங்கள். இந்த ஐந்து வனத் தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம் என்பர்.

 பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
 மொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடை
 நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
 பித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்