54. திருஇரும்பைமாகாளம்

இறைவன் : மாகாளேஸ்வரர்.
இறைவி : பாலாம்பிகை, வேற்கண்ணி.

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 32 ஆவது பாடல் பெற்ற ஸ்தலம் இது .  கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். 


பழுத்த அரசு இலையினையே உணவாக உண்டு தவஞ்செய்து வந்த இச்சித்தரைக் கண்டு கேட்க அவ்வூரிலிருந்த வள்ளி என்னும் பெயருடைய தாசி எண்ணினாள்.அவர் தவம் செய்யுமிடத்திற்கு வந்தாள். தவத்திலிருந்த சித்தர் பழுப்பிலையை உண்ணக் கையை நீட்டியபோது அவள், அவர் கையில் உணவை இட்டாள். அதைப்பெற்று உண்டமையால் உணர்வு வர, சித்தர் கண் விழித்துப் பார்க்க, அவளும் நாட்டில் பஞ்சம் நீங்கிச் செழுமை உண்டாக அவரிடம் வேண்டினாள். சித்தர் ஆலயத்திற்கு வந்தார். அப்போது தாசியும் தன் பணியாக நடனமாடினாள். ஆடும்போது அவள் காற்சிலம்பொன்று அவிழ்ந்து விழ அதைக்கண்ட கடுவெளிச்சித்தர் அச்சிலம்பை அவள் காலிற் பூட்டிவிட, மக்கள் இதைக்கண்டு பரிகாசஞ் செய்தனர். சித்தர் வெகுண்டு இறைவனை நோக்கி

    “வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை
      செல்லும் பொழுது செலுத்துவேன் சிந்தையை
      அல்லும் பகலும் உன்னையே தொழுவேன்
      கல்லும் பிளந்து கழுவெளியாமே.”
எனப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. சிவலிங்கத் திருமேனி வெடித்ததறிந்து மக்கள் பயந்து திகைத்தனர்.  சித்தரின் திருவடிகளில் வீழ்ந்து தங்கள் பிழைபொறுக்க வேண்டினர். மனமிரங்கிய கடுவெளிச்சித்தர் மீண்டுமொரு பாடலைப் பாடினார்.

     “எட்டும் இரண்டும் அறிந்த எந்தனை
      எட்டும் இரண்டும் அறிந்த உந்தனை
      எட்டும் இரண்டும் ஒன்றதாகுமே”
இவ்வாறு ஒட்டப்பாடியதும் வெடித்து விழுந்த 3 சில்லுகளுள் 2 
சில்லுகள் வந்து பழையபடியே ஒட்டிக்கொண்டன. ஒன்றுமட்டும் வெளியே போய் விழுந்தது. அச்சில்லு விழுந்த இடம் ‘கழுவெளி’ என்னும் பெயரில் சிறு கிராமமாகப் பக்கத்தில் உள்ளது. சித்தர் மீண்டும் ஒரு பாட்டுப் பாட சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
 மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்