96. திருச்சோபுரம் (தியாகவல்லி)

 நடு நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் 6ஆவது  சிவ ஆலயமும், தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 38ஆவது தலம் ஆகும். 


இறைவன் :   சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர், ம்ருத்திபுரீஸ்வரர், நேத்ரபுரீஸ்வரர்.  

இறைவி: சோபுரநாயகி, தியாகவல்லியம்மை, வேல்நெடுங்கண்ணி. 





முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற இருந்தபொழுது, திருமணத்தில் கலந்து கொள்ள தேவர்கள், முனிவர்கள் அனைவரும் கயிலையை நோக்கிச் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென் திசை செல்லுமாறு பணித்தார். இறைவனின் திருமண காட்சியை காண இயலாத வருத்தத்தில் அகத்தியர், 'நான் தங்களின் திருமண கோலத்தை காண்பது எங்ஙனம்?' என வினவினார். அதற்க்கு சிவபெருமான், 'தாம் எப்போதெல்லாம் எம் திருமண கோலத்தை காண விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் அக்கோலத்தில் நாம் காட்சியளிப்போம்' எனக்கூறவே அகத்தியர் மகிழ்ந்து தென் திசை நோக்கி வரலானார்.  அவ்வாறு அவர் வரும் வழியில் எங்கெல்லாம் திருமணக்கோலத்தை காண விரும்பினாரோ அங்கெல்லாம் சிவ லிங்கம் அமைத்து இறைவனின் திருமண கோலத்தை கண்டு கழித்தார். 

தமது பயணத்தில், திருச்சோபுரம் எனும் இப்பகுதிக்கு வரும் பொழுது  இறைவனின் திருமணக்காட்சியை காண விரும்பி கடற்கரை மணலால் லிங்கம் அமைத்து வழிபட எண்ணினார். ஆனால் பல முறை முயற்சித்தும் மணலில் லிங்கம் அமையாததால், அறிய மூலிகைச்சாற்றை மணலுடன் கலந்து அழகிய நீண்ட பாண லிங்கம் அமைத்தார். பின்னாளில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் அகத்தியர் வடித்த இப்பாண லிங்கத்திற்கு சதுர வடிவில் ஆவுடையார் அமைத்தனர். 

ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்ட பொழுது இப்பகுதியானது கடலால் சூழப்பட்டு பின்னர் கடல் மணலால் மூடப்பட்டுவிட்டது. ஒரு நாள் மதுரை திருஞான சமபந்த மடத்தின் அடியவர் இராமலிங்க தம்பிரான் நடுநாட்டு தளங்களை தரிசிக்க விரும்பி இவ்விடத்தை அடைந்து சோபுரநாதர் ஆலயம் எங்கு உள்ளது என விசாரித்தார். அப்பொழுது இங்கு இருந்த மக்கள் கோயில்மேடு என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று இங்கு ஆலயம் ஏதும் இல்லை, இந்த மணல் மேடு தான் கோயில்மேடு என அழைக்கப்பட்டு வருகிறது எனக்கூறினர்.  அப்பொழுது பலத்த காற்று  வீச, மணல் மேட்டின் உச்சி பகுதி கலைந்து, கோபுரத்தின் ஸ்தூபி சிறிய அளவில் தெரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வியப்படைந்து மணலை அப்புறப்படுத்த ஆலயத்தைக் கண்டு பரவசமடைந்தனர். 


ஆலயத்தை திறந்த பொழுது அப்போதும் கருவறை தீபம் எரிந்து கொண்டிருக்க, நைவேத்தியங்களோடு பூசை நடந்து முடிந்ததற்கான அறிகுறிகளோடு இருப்பதைக் கண்டு அதிசயித்து நின்றனர். 

வெங்கண் ஆனை யீருரிவை 
  போர்த்துவிளங் குமொழி1
மங்கைபாகம் வைத்துகந்த 
  மாண்பதுவென் னைகொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக் 
  கடிகமழுங் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய் 
  சோபுரமே யவனே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்