இறைவன்: சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.
இறைவி: ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.
இத்திருக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் 34 ஆவது தலம் மற்றும் தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 2 ஆவது தலம் ஆகும். தேவாரப் பாடல்களில் தூங்கானை மாடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள சிவதலம் தற்போது பெண்ணாகடம் அல்லது பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது.
தேவகன்னியர், தெய்வலோகப் பசுவான காமதேனு, வெள்ளை யானை இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் (பெண் + ஆ + கடம்) என்று வழங்குகிறது. ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த பூலோகம் வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்து இங்கேயே தங்கி விட்டனர். மலர் கொண்டுவரச் சென்ற தேவகன்னியர் திரும்பி வாராமை கண்டு, இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, இங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து பெருமானை வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது.
ஒருமுறை பிரளய கால வெள்ளத்தைத் தடுக்க சிவனும் நந்தியிடம் ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது.
வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிக்க சோழமன்னன் ஒருவன் இத்தலம் வரும் போது வெள்ளாற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி மன்னன் சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி கோயிலுக்குள் உள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவர் கலிக்கம்பநாயனார் அவதரித்த தலம் பெண்ணாகடம். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது வீட்டில் பணீயாளாக இருந்த ஒருவன் சிவனடியாராக அவர் வீட்டிற்கு வந்த போது பணியாள் காலைக் கழுவி பாதபூஜை செய்ய நீர் வார்க்க தாமதித்த அவர் மனைவியின் கையை வெட்டினார் கலிக்கம்பர். கருணைக்கடலான் ஈசன் அவர் மனைவியின் கையை மீண்டும் தந்தார். கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்ததால் இறைவனுக்கு கைவழங்கீசர் என்ற பெயரும் உள்ளது.
திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமணர் குழுவிலே, சமண நெறியிலே வாழ்ந்துவந்த இந்த மெய்யுடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு 'பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்' என்று தொடங்கும் இப்பதிகம் பாடி முடித்தவுடன் ஒருவரும் அறியாமல் ஒரு பூதம் வந்து திருநாவுக்கரசர் திருத்தோளிலே சூலப் பொறியும், இடபப் பொறியும் ஆகிய சிவச்சின்னங்களை இட்டது. அவற்றைக் கண்டு அப்பர் பெருமகிழ்வுடன் இறைவனை விழுந்து பணிந்தார். திருநாவுக்கரசர் வாழ்க்கையில் இத்தகைய அற்புதம் நிகழ்ந்த தலம் தூங்கானைமாடம் என்ற இத்தலம்.
ஒடுங்கும் பிணிபிறவி கேடன்று இவை
உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம்
அடங்கும் மிடங்கதி நின்றீர் எல்லாம்
அடிகள் அடிநிழற்கீழ் ஆளாம் வண்ணம்
கிடங்கும் மதிலும் கலாவிஎங்கும்
கெழுமனை கள்தோறு மறையினொலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.
- திருஞானசம்பந்தர்
பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண் டேல்இருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க் கொழுந்தே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்