128. திருவேள்விக்குடி

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 77ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 23ஆவது சிவத்தலமாகும்.  

இறைவன்: மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்,கௌதகேஸ்வரர் 

இறைவி: பரிமளசுகந்தநாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி







ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.

சுய உருவம் பெற்ற அம்பிகை ஈசனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மனலால் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர 17வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.

அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட அவளின் உறவினர்கள் இத்திருமணத்தை நிறுத்தி விட்டனர். அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை. அரசகுமாரன்  இத்தலம் வந்தான். நின்று போன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான். இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டு வரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணிற்கும் திருமணம் செய்து வைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது. 
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல் கங்கையை ஒருசடைமேல்
தாங்கினார் இடுபலி தலைகல னாக் கொண்ட தம்மடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்திஆர் இரவிடத்து உறைவர் வேள் விக்குடியே
- திருஞானசம்பந்தர்
மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டாகத் தூரினும் ஆகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண் துருத்திஎங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம்இவர்க்(கு) ஆட்படோமே.
- சுந்தரர்

கருத்துகள்