இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 42ஆவது தலமும், நடு நாட்டுத்தலங்களில் 10ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: சொர்ணகடேஸ்வரர், வெண்ணெய்யப்பர், நெல்வெண்ணெய்நாதர்.
இறைவி: பிருஹந்நாயகி, நீலமலர்க்கண்ணி.
ஒரு காலத்தில் வயல்கள் நிறைந்த இவ்விடத்தில் பெருமழை பெய்ய ஏரி குளங்கள் நிரம்பி வழிந்தன. ஏரி உடைந்து தண்ணீர் வெள்ளமாக ஊருக்குள் வர மக்கள் இறைவனிடம் தஞ்சமடைந்தனர். இறைவன் ஒரு வாலிப வடிவில் நெல் மூட்டைகளை அணையாக அடுக்கி வெள்ளத்தைத் தடுத்து அவர்களைக் காத்தான். மக்கள் அந்த வாலிபனைப் போற்ற, வாலிபனாக வந்த அந்த சிவபெருமான் இறைவனே சிறந்த காப்பு என்பதை அவர்களுக்கு எடுத்த்துரைத்து அவர்கள் இழந்த பொருள் பெற தங்கக் குடத்தைக் கொடுத்து மறைந்தார். அதனால் இறைவனுக்குச் சொர்ணகடேஸ்வரர் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வூரும் நெல்வெணெய் (தற்போது நெய்வணை என்று வழங்குகிறது) என்று வழங்கப் பெற்றது. இத்தலத்து கல்வெட்டு ஓன்றில் இத்தல இறைவன் பெயர் பொற்குடங் கொடுத்தருளிய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்வெணெய் விழுதுபெய்து ஆடுதிர் நாள்தொறும் நெல்வெணைய் மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீர்மை நாள்தொறும் சொல்வணம் இடுவது சொல்லே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்