தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 239 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும்.
இறைவன் : கைச்சினேஸ்வரர், கைச்சினநாதர்.
இறைவி : வெள்வளை நாயகி.
கெளதம முனிவர் மனைவி அகலிகை மீது மோகம் கொண்ட இந்திரன், முனிவர் இல்லாத போது இந்திரன் கெளதமரைப் போலவே உருமாறி அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் ஆசிரமத்துக்கு திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்திற்கு வந்து மண்ணால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். பலகாலம் வழிபட்டும் தன் சாபம் நீங்காமல் இருக்கக் கண்ட இந்திரன் சிவலிங்கத்தைக் கைகளால் கட்டிப் பிடித்துக் கொண்டு சிவனிடம் தன்னை மன்னித்து அருளும் படி வேண்டினான். இவ்வாறு இந்திரன் செய்துவர இந்திரனின் கைச்சின்னம் சிவலிங்கத்தில் பதிந்து தழும்பாக மாறியது. சிவன், நீண்ட நாள் சாபத்தில் சிக்கி வருந்திய இந்திரனுக்கு விமோசனம் கொடுத்தார். இதனாலேயே இந்திரன் பூஜை செய்த இந்த சிவலிங்கத்திற்கு கைச்சின்ன நாதேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. தலமும் கைச்சின்னம் என்று பெயர் பெற்று விளங்குகிறது.
தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான் மையுளா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான் நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர் கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
- திருஞானசம்பந்தர்



கருத்துகள்